Thursday 21 July 2011

                           சங்க இலக்கியமரபில் கவிஞர் இளையபாரதியின் பட்டினப்பாலை, செம்புலப்பெயல் நீர் கவிதைகள் ஓர் ஆய்வு
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.


இளைய பாரதி என்னும் பன்முகப்படைப்பாளி
கவிஞன் கவிஞனாக மட்டுமே வாழவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.  தன் படைப்பின் அடிநாதத்தைக் கவிஞனாகத் திரைப்பட இயக்குநராக, வரலாற்றுக்கே வரைபடம் வரையும் பத்திரிகையாளராக, உ.வே.சா. போன்று அரிய நூல்களைப் பதிப்புச் செய்யும் (பத்திரிகை சார்ந்த) பதிப்பாளனாக, தமிழ்த் தொண்டராகப் பண்முகப் பார்வையோடு தந்துவரும் படைப்பாளியே இளையபாரதி.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலராகப் பணியாற்றிய கவிஞர் இளைய பாரதியின் இயற்பெயர் திரு. சாமிநாதன் பாலசுப்பிரமணியன், மயிலாடுதுறையைச் சார்ந்த இவர், அசோகமி்த்ரன், விமர்சகர் கா.சிவத்தம்பி போன்றோரால் பெரிதும், பாராட்டப்பெற்ற, கலைஞரின் “தென்பாண்டிச் சிங்கம்“ தொலைக்காட்சித் தொடரை இயக்கியவர்.  கோமல் சுவாமிநாதனுடன் இணைந்து சுபமங்களாவை மிகச்சிறந்த இதழாக்கிக் கலைஞர் முதல் கலாப்ரியா வரை என்ற நேர்காணல் திரட்டைத் தந்தவர்.  புதுமைப்பித்தன் தன் துணைவி கமலாவுக்கு என்ற தலைப்பில் நூலாக்கியவர்.  தமது புதுமைப்பித்தன் பதிப்பகம், சந்தியா பதிப்பகத்தின் சார்பாக வண்ணதாசன், வண்ணநிலவனின் அனைத்துப் படைப்புக்களையும் தொகுப்பு மேற்கொண்டு தொகுப்பு நூல் வெளியிட்டவர்.  “மரணத்தின் நட்சத்திரங்கள், பட்டினப்பாலை“ எனும் தமது கவிதை நூல்களால் கவிதை உலகில் பரிமாணங்களைக் கண்டவர்.  அவருடைய கவி ஆளுமையை இக்கட்டுரையின் கரு.
இளைய பாரதியின் கவி ஆளுமை
    தமிழின் நீண்ட நெடிய பண்பாட்டு மரபுள்ள சங்க இலக்கியத்தை முறையாக உள்வாங்கி மாற்றுருவாக்கம் செய்த புதுக்கவிஞர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  மரபை அறியாமலேயே மரபை மீறியதாய் அறை கூவல் விட்ட கவிஞர்களும் உண்டு.  மு.மேத்தா, சிற்பி, அப்துல் ரகுமான் போன்றோரின் கவிதைகள் செழுமை மிக்கதாய் அமைந்ததன் காரணம்.  அவர்கள் சங்க இலக்கியத்தமிழ் மரபை நன்கறிந்து பேராசிரியர்களாய் பாடம் நடத்தியதோடு, புதுக்கவிதை எழுதியவர்கள் என்பதால்தான் ஞானக் கூத்தனின் “அன்று வேறு கிழமை“ இதற்கு மற்றொரு சான்று.  இளைய பாரதியின் “பட்டினப்பாலை“ கவிதை நூல் இம்மரபுக்கு இன்னொரு இனிய சான்று.
    அகமும் புறமும் கலந்த சங்க மரபைப் “பட்டினப்பாலை“ எனும் தமது கவிதைநூலில் இளையபாரதி அழகாகக் கையாள்கிறார்.  அந்நூலை இருகூறுகளாய் வெளியிட்டுள்ள இளையபாரதி, புறம் தொடர்பான கவிதைகளுக்கு முதலிடம் தந்து பட்டினப்பாலை என்ற தலைப்பிலும், காதல் தொடர்பான அகச் செய்தியினை இரண்டாமிடம் தந்து “செம்புலப் பெயல் நீர்“ என்ற தலைப்பிலும் தருகிறார்.
    தான் பிறந்த கிராமம் வைகை அணைக்குள்ளே ஜலசமாதி ஆனபோது கவிதையால் கண்ணீர் வடித்த கவிப்பேரரசு வைரமுத்து மாதிரி, “சாயாவனம்“ எரிந்ததற்காகக் கதறிய சா, கந்தசாமி மாதிரி, கரிகாற் பெருவளத்தாலும் பட்டினத்தடிகளும் தானும் விளையாடிய சோழ நாட்டின் கடற்கரை நகரம் பூம்புகார் காலமாற்றத்தில் வறண்டு போனது கண்டு இளையபாரதி துடித்த துடிப்பே “பட்டினப்பாலை“ இந்நூலின் மனம் உணர்வதை அறிய முடிகிறது.
    வண்ணதாசனுடைய ஆத்மா திருநெல்வேலியிலும் தாமிரபரணியிலும் இருப்பதுமாதிரி, தி. ஜானகிராமனின் படைப்புலக அடிநாதம் காவிரிக் கரையில் இருப்பது மாதிரி, இளையபாரதியின் எழுத்து உயிர்.  “நடந்தாய் வாழி காவேரி! என்று கம்பீரமாய் முன்பு ஓடி பல்வேறு மாற்றங்களால் (சூம்பிப் போய் காவிரிப் பூம்பட்டினப்பாலை” என்கிறார் இளைய பாரதி.
    கவிதை மொழி அக மனத்தின் அபயக்குரலுக்கும், புற உலகின் அபாய நிகழ்வுகளுக்குமிடையே அமையும் டைவெளியே இளைய பாரதியின் கவிதைக் கரு.  மரணம் சார்ந்த கையறுநிலை மொழியே இளையபாரதியின் குழந்தை மொழியில் பிறப்பன அவரது கவிதைகள்.


“கனவு காணும்
குழந்தையின் மொழியில்
எழுது
உன் கவிதையை
அதினிடையே கேட்கும்
கடவுளின் இருதயத்துடிப்பு“
வாழ்வும் சாவும், வாழ்வையும் சாவையும் ஒரே கிண்ணத்தில் அருந்த வேண்டிய எதார்த்தத்தை முரண்பாட்டுக் கவிதையில் காட்டுகிறார் கவிஞர்
இப்படி
தாய் ஊட்டுகிறாள்
ஒரு முலையால் வாழ்வையும்
ஒரு முலையால் சாவையும்“
இக்கவிதை பற்றிக் கூறும் ஞானக்கூத்தன் “கண்ணனுக்குப் பாலூட்டிய பூதகியின் உருவம்தான் தாயின் உருவமா? தாய் சேயை வெளியேற்றுகிறாள். எல்லா வெளியேற்றமும் சாவின் வடிவ வேறுபாடு.  ஒரு பாடத்தின் மீது மற்றொரு பாடம் எழுதப்படுகிறது“ எனக் கூறுகிறார்.
    உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலையின் மீது இன்றைய பட்டினத்தில் பாலைவனமான கொடூரத்தனங்கள் மீண்டும் எழுதப்படுகின்றன.  செம்புலப் பெயல்நீர் மீது இன்றைய காதல் தோல்விகளின் குருதிப் பிழிதல்கள் மீண்டும் எழுதப்படுகின்றன.  பழைய வீடடுக்கு வண்ணம் தீட்டுவது மாதிரி, நேற்றைய பாடல்கள் மீது இன்றைய புதிய சிந்தனைகள் மேலேற்றப்படுகின்றன.  புதுமைப்பித்தன் புராணக் கதையின் மேல் அகலிகையை அமர வைத்துச் சாபவிமோசனம் தந்தது போல, இளையபாரதி இவ்வரிய உத்தியை அழகாகக் கையாளுகிறார்.
    ஒரு கவிதை, வாசகனுக்குள் ஆயிரம் கவிதைகளை எழுத முடியும் என்பதற்கு இக் கவிதை சான்று...

“கங்கையில் மிதக்கும் பிணங்களின்
கண்களைப் பிடுங்கித் தின்று
கொழுத்த மீன்களை
அரிசிப் பொரி போட்டு
அடக்கி வைக்க முடியுமா?”

இதில் இச்சமூகத்தின் எந்தக் கொடூர நிகழ்வுகளையும் பொருத்திப் பார்க்க முடியும்.

மரணத்தை முன்னிறுத்தி...
    இளையபாரதியின் அகமனத்தில் மரணம் வெகுவாகப் பதிந்துள்ளதை வாசகனால் வரிக்கு வரி உணர முடிகிறது.  “சாவிகள் இல்லாதது சவப்பெட்டி“.
“பக்கத்து வீட்டுப் பெரியவர்
மரித்த மறுநாள் காலையில்
குப்பையில் பளிச்சென்று கிடந்தது
அவரின் சிரிப்பாய்
செயற்கைப் பல்வரிசை“
“பிணங்களை அலங்கரிக்கும் பின் நவீனத்துவக்காரி“ எனும் கவிதை அதிர்வினைத் தரும் புதிய முயற்சி. பிணங்களை அலங்கரிப்பவளைப் பற்றிய நீண்ட கவிதை ஒவ்வொரு வரியிலும் சாவின் கொடூரம் தெரிகிறது.  “பிணங்களை அலங்கரிக்கவே பிறந்ததுபோல் அவள் வாழ்கிறாள்” என எழுதுகிறார்.  “பிணங்களின் முகங்களைப் படித்துப் படித்து / அவள் மனசில் குவிந்து கிடக்கிறது / மரணக்குறிப்புகளின் துயரக் கவிதை.  மரணம் இந்த அளவுக்கு இளைய பாரதியைப் பாதிப்பதன் காரணம் அவர் வாழ்வில் நடந்த பயங்கரமான சாவு நிகழ்வு அடி மனத்தில் ஆழப் பதிந்தது காரணமாய் இருக்கலாம்.
காதல் கவிதைகளில் இளையபாரதி
    இளையபாரதியின் கவிதைகள் குறித்து கல்யாண்ஜி அவருக்கு எழுதிய கடிதத்தில் “இவ்வளவு தூரம் இரைக்க இரைக்க முந்திரித் தோப்புச் சருகுகளின் மூச்சுமுட்ட ஓடிவந்த பின்பும், ரோஜாக்களின் துரத்தல்களைப் பற்றி எப்படிப் பேச முடிகிறது.  அதுவும் ஒரு இருபது வயதுக் குரலுடன்“ என்கிறார்.  செம்புலப் பெயர் நீரில்... காதல் வரையும் கவிஞர்.
“ஒரு
முளைப்பாரியை
வனமாக்கியவள்
நீ“
என எழுதும் போது வியப்பு ஏற்படுகிறது.  முள்ளுக்கு அருகில்தாள் ரோஜா இருக்கும் என்ற முரண் மாதிரி.  நேசத்திற்குச் சங்கக் கவிதைகள் நிறைய சான்றுகள் தந்திருக்கின்றன.  ஆனால் இது போன்ற உவமை இல்லை.
“ரத்தச் சகதியாய்ச் சிதறிக் கிடக்கும்
மனித உடல்களைப் பார்த்த பிறகும்
விபத்தின் சாலையில்
விரைகின்ற பயணத்தைப்போல்
நேசிக்கிறேன் உன்னை“
காதல் கவிதை எழுதும் போதும் இளைய பாரதியால் சாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“மனப்பூர்வ சம்மதம்
மரணமாகவம் சூடிக்கொள்ள
சரி
என் சாம்பலைக் பூசிச்
சபதம் முடித்துக்கொள்
அகக் கவிதைகளில் உள்ளத்தை எழுதுவது என்பது மேலோங்கி உள்ளதை எழுதுவது பின்னுக்குப் போய் விட்டதைக் காண முடிகிறது.
ஆய்வு முடிவுகள்
இளைய பாரதியின் அகக்கவிதைகளில் காதலின் ஈரமும், புறக்கவிதைகளில் மரணக் குருதியும் கசிவதைக் காண முடிகிறது.  தமிழின் சங்க மரபுகளை அழகாக மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.  இவரது பாணியில் எழுதும் வழித் தோன்றல்கள் தோன்றக்கூடும்.  பொட்டில் அடித்தாற்போல மிக அழகாக, நேர்த்தியாக இவரால் கவிதை சொல்ல முடிகிறது.  மரணக் கவிதைகளை விடக் காதல் கவிதைகளில் இவரது திறன் மிகையாய் தெரிகிறது.  சில நீண்ட கவிதைகள் கூறியது கூறல் மரபில் பின்னோக்கிக் கொண்டு செல்கிறது.  கல்யாண்ஜி எழுதியதைப்போல் இவரின் கவிதைகள் இரத்த அழுத்தத்தை மாற்றுகின்றன.  அழிந்து போன பூம்புகார் இவரது “பட்டினப்பாலை“யால் கவி உருவம் பெற்றுள்ளது.  எந்தத் திரைகளுமின்றி இவரால் இயல்பாகக் கவிதை சொல்ல முடிகிறது.  கவிதைக்கான மென்மைத் தன்மை குறைந்து வன்மையாக, வளமாக மாறுவதை உணர முடிகிறது.  மொத்தத்தில் இளையபாரதியின் கவிதை ஆளுமை பட்டினத்தார் போன்று, சித்தர்களைப் போன்று உலகம் கடந்த பார்வையாகவே அமைகிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலம் நடத்தி “நெடும்புனல்“ தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.  ஆய்வுக்கோவை. பக்.236 - 240
                               சமூக மாற்றத்தில் தமிழ் இதழ்களின் சீரிய பங்களிப்பு – வரலாற்றுப் பார்வை

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

தொடக்கம்
பத்திரிகையாளரின் எழுதுகோல் தலைகுனிவதே இச்சமூகம்
தலைநிமிரத்தான்.  ஆட்சிப்பீடம், நாடாளுமன்றம், நீதிமன்றம் எனும் முத்தூண்களோடு, நான்காம் தூணாய் அமைந்து சனநாயகத்தைச் சலவை செய்துவரும் முக்கியத்தூண் பத்திரிக்கைகள் ஆகும்.  
தமிழா! நீ இருந்ததுபோதும் செருப்பாய், இனிமேல் இருப்பாய் நெருப்பாய் எனும் கவிஞர் காசிஆனந்தனின் எழுச்சி வரிகளை நாம் அறியத் தந்த ஊடகங்கள் பத்திரிகைகள்.  கீழவெண்மணியில் கொடூரமான மனிதர்நோகப் படுகொலை நடந்தபோது உலகப் பார்வைக்குக் கொண்டு சென்றதும் பத்திரிகைகள்தாம்.  நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத கம்பீரம், சமூக மாற்றத்திற்காகத் தன் உடல் பொருள் ஆயுளாலே அளித்த தியாகம்... இவை போன்ற பண்புகளால் தன்மானம் ஊட்டிய இனமானப் பெரியாரின் குடியரசு எண்பதை எட்டுகிறது என்பதால் இக்கட்டுரை ஒருசில இதழ்களை முன்னிறுத்துகிறது.
சுதேசமித்ரனும் சமூக மாற்றமும்
    ஜி. சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பெற்ற (1882) சுதேசமித்ரன் வார இதழ், 1889 ஆம் ஆண்டிலிருந்து நாளிதழாய் உருப்பெற்றது.  சமூக மாற்றத்தை முன்னிறுத்திப் புதுமை போக்குடன் திகழ்ந்தது.  சமூக, அரசியல், பொருளாதார நோக்கில் இவ்விதழ் ஒவ்வொரு நிகழ்வையும் விமர்சித்தது.  தேச விடுதலையும், சமூக விடுதலையும் இதன் இரு கண்களாகத் திகழ்ந்தன.  பாரதி 1904 இதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.  அவரது கட்டுரைகள் பெண்விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, விதவை மறுமணம், பெண் கல்வி போன்ற கோணங்களில் சமூகம் எழுச்சி பெற உதவின.
    அதன்பின் 1906இல் பாரதி தொடங்கிய இந்தியா தமிழ் வார இதழும் பாரதி ஆசிரியராயிருந்து வழிகாட்டிய சக்ரவர்த்தினி மாத இதழும் சமூக மாற்றத்திற்குப் பேருதவி புரிந்தன.  பாரதி ஆசிரியராயிருந்து (1909 1910) புதுவையிலிருந்து நடத்திய விஜயா நாளிதழ் தீண்டாமையைக் கடுமையாகச் சாடியது.  அந்நாளிதழின் 18.02.1910 தேதியிட்ட இதழில் பாரதி தீண்டாதவர்கள் எனும் கட்டுரையில் தீண்டாமையைக் கடுமையாகச் சாடுகிறான்.  நாம் இந்தச் ஜாதியாரில் ஒவ்வொருவனும் நற்குணமில்லாதவனென்று கருதுவது கண்மூடித்தனமாகும்.  உலகத்தில் ஒவ்வொரு ஜாதியாரும் பெருமையாய் வாழ விரும்ப வேண்டுவது இயற்கை.  ஒருவன் பிறப்பில் தாழ்ந்த ஜாதியென்றும் மேலான ஜாதியென்றும் பிரிக்கப்படுவது நியாயமாகாது.  எல்லோரும் தெய்வ சிருஷ்டி. (பாரதி விஜயா கட்டுரைகள் தொ.ஆ. ஆ.இரா. வெங்கடாசலபதி, ப.130 131) தீண்டாமையைக் கருத்தில் மகாத்மாவோடு பாரதி முரண்பட்டு இதழ்களில் எழுதிக் கண்டித்ததை உணர முடிகிறது.
தேசபக்தனும் சமூக மாற்றமும்
    திரு.வி.க. 1917இல் ஆசிரியராய் பொறுப்பேற்ற தேசபக்தன் தூயத் தமிழில் சமூக முன்னேற்றக் கருத்துக்களை முன் வைத்து சாதிமத பேதங்களைத் தேசபக்தன் கடுமையாய் சாடியது.  தொழிலாளர் முன்னேற்றம்,  பெண் கல்வி, சாதி ஒழிப்பு போன்ற கருத்துகளைத் தேசபக்தனில் திரு.வி.க. தொடர்ந்து எழுதினார்.
தந்தை பெரியாரின் எழுத்தோவியங்கள் ஏற்படுத்திய சமூக மாற்றம்
    தந்தை பெரியாரின் இதழியல் சாதனைகள் மகத்தானவை கடவுள் மறுப்பாளர் எனும் ஒரே காரணத்தால் அவர் செய்த சமூக முன்னேற்ற முயற்சிகள், அவர் நடத்திய இதழ்கள் சாதித்த சாதனைகள் ஆகியன இன்றும் இருட்டடிப்பு செய்யப்படுவதையும் கொச்சைப்படுத்தப்படுவதையும் காணமுடிகிறது. அச்சமற்றவன் ஒற்றை மனித இராணுவம் எனும் கூற்றுக்கேற்பப் பெரியார் பகுத்தறிவு இராணுவமாகவே திகழ்ந்தார்.  வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடின்றி வாழ்ந்ததால் இன்று அவர் மட்டுமே பெரியார் எனும் அடைமொழிக்குச் சான்றாகிறார்.  1929 ஏப்ரலிலிருந்து பெரியார் திராவிடன் இதழின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, எரிமலையாய் எழுதினார்.  அதன்பின் கோவைச் சிறையில் தன் நண்பர் தங்கபெருமாள் பிள்ளையுடன் இருந்தபோது (1922)  குடியரசு எனும் இதழைத் தொடங்கப் பெரியார் எண்ணினார்.  அக்கனவு 1924இல் நனவானது.  இதழின் முகப்பில் பாரதமாதா படம், மகாத்மா காந்தி வாழ்க எனும் வாசகமும் இடம் பெற்றது தலையங்கப் பக்கத்தில் கைராட்டை இடம் பெற்றது.
    மக்களின் சுயமரியாதை ஓங்க வேண்டும்.
    சாதி என்ற சொல்லே சாக வேண்டும்.
    இன உணர்வுகளும் ஒற்றுமையும் உருப்பெற வேண்டும்.

என நினைத்த பெரியார் 1933 இல் குடிஅரசு தடை செய்யப்பெற்ற பின் புரட்சி பகுத்தறிவு, விடுதலை உண்மை, போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தினார்.  பகுத்தறிவில் அவர் முன் வைத்த எழுத்துச் சீர்திருத்தமே இன்று நடைமுறையில் உள்ளது.  எழுதியதோடு மட்டுமல்லாது, செயல்பாட்டிலும் சிறந்து விளங்கினார்.  தாழ்த்தப்பட்டோர் அவரால் வைக்கம் தெருவில் கம்பீரமாய் நடந்தனர்.  வ.வே.சு.ஐயர் சேரன்மகாதேவியில் நடத்திய பரத்வாஜ குருகுலத்தில் நடைபெற்ற சாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து எழுதித் தீண்டாமையைத் தடுத்தார். 48 ஆண்டுகள் பத்திரிகையாளராய் எழுதிச் சாதனை படைத்தார் வெண்தாடி வேந்தர் ஈ.வே.ரா. பெரியார்.

பேரறிஞர் அண்ணாவும் சமூக மாற்றமும்
    அரசியல் விழிப்புணர்ச்சி சீர்திருத்தம், பகுத்தறிவு கருத்துக்களோடு அண்ணா 1942ல் திராவிடநாடு இதழில் அனலாய் எழுதினார்.  தம்பிக்கு என் கடிதம் மூடநம்பிக்கைகளைச் சாடினார்.  21 ஆண்டுகள் திராவிட இன எழுச்சிக்காக, மொழிவளர்ச்சிக்காக அரியகட்டுரைகள் தந்தார் அறிஞர் அண்ணா நவயுகம், விடுதலை, பாலபாரதி, மாலைமணி, நம்நாடு, காஞ்சி போன்ற இதழ்களில் எழுதித் தொடர்ந்து சமூக மாற்றம் கண்டார்.
ஆனந்த விகடனின் சமூகப் பார்வை
    பிரம்மன் எழுத்து ஆயுசோடு முடிகிறது.  ஆனால் பேனா பிடித்தவன் எழுத்து எத்தனை காலம் நீடித்து நிற்கிறது.  (அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் ப.96) என்று கூறிய எஸ்.எஸ். வாசன் புதூர் வைத்தியநாதையரிடமிருந்து எழுத்துக்கு 25 ரூபாய்வீதம் தந்து 1926 இல் ஆனந்த விகடனை வாங்கி வெற்றிகரமாய் நடத்தினார்.  சென்னையிலிருந்து கொண்டே ஈரோட்டில் ஈ.வெ.ரா. பெரியார் நடத்திய குடியரசு இதழுக்கு விளம்பரம் சேகரித்து அனுப்பினார்.  கேலிச்சித்திரங்கள், தலையங்கங்கள் மூலம் சமூக மாற்றத்திற்கு ஆதரவு அளித்தார்.  ஆனந்தவிகடன் நாடக இலக்கியப் போட்டிகள், முத்திரைக்கதைகள் போட்டி, முத்திரை ஓவியங்கள் போட்டிகள் நடத்தி சமூக மறுமலர்ச்சியினை ஏற்படுத்திப் பெரும்பரிசு தந்தார்.  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை விகடனில் நடைமுறைப்படுத்தி ஸ்ரீமான்களைத் திருவாளராக்கினார்.  விகடன் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டம் வகுத்து இளைஞர்களைச் சமூக மாற்றத்திற்காக எழுத வைத்தார்.  கல்கியின் தியாக பூமியை ஆனந்த விகடனில் வெளியிட்டு நாட்டுப்பற்று, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை ஆகியவற்றை இலட்சக்கணக்கான வாசகர்கள் சிந்திக்க வைத்தார்.  இன்றும் இதே போக்கு ஜுனியர் விகடன் (1982லிருந்து) அவள் விகடன் (1996லிருந்து) சுட்டி விகடன் (1999லிருந்து) சக்திவிகடன் (2004லிருந்து) நாணயம் விகடன் (2005லிருந்து) சிறப்பாகத் தொடர்கிறது.
கலைஞரின் எழுத்தோவியங்களில் சமூக மாற்றம்
    திருக்குவளையில் மாணவராயிருந்தபோதே மாணவநேசன் கையெழுத்து இதழ் நடத்திய கலைஞர் மு.கருணாநிதி குடி-அரசு இதழில் துணை ஆசிரியராய் பணியாற்றி விதவை மறுமணம்.  பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு பற்றிய நிறைய எழுதியுள்ளார்.  மறவன்மடல், முத்தாரம் போன்ற இதழ்களை நடத்திய கலைஞரின் எழுத்து, கத்தியை விடக் கூர்மையான நாசூக்கா கலைஞர் எழுதும் திறன் பார்த்துத் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் கருணாநிதியைப் போலப் பொடி வைத்து எழுத வேண்டும் எனப் பாராட்டினார் முரசொலி நாளிதழை உருவாக்கிப் பேனா முனையில் கலைஞர் சமூக மாற்றம் செய்து தமிழக முதல்வராய் அரியாசனம் ஏறி உள்ளார்.
தினமணியின் சமூகச் சிந்தனை
    இதழாளர் திரு. சந்தானத்தால் 11.09.1934இல் தொடங்கப் பெற்ற தினமணி தேசப்பற்றை மிகத் தரமான தமிழில் தந்தது.  முதல் எட்டு ஆண்டுகள் டி.எஸ்.சொக்கலிங்கமும், அதன் பின் ஏ.என். சிவராமனும், ஐராவதம் மகாதேவன், புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா போன்றோர் பணியாற்ற உருவான தினமணி என்றும் எவருக்கும் எதற்கும் அஞ்சாமல், தரமாக, ஏழை எளிய மக்களின் சமூக மறுமலர்ச்சிக்காகத் தொண்டாற்றி வருகிறது.
முந்தித் தந்தி தந்த முன்னவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்
    தமிழரின் சமூக மாற்றத்திற்காக “நாம் தமிழர் இயக்கம்“ கண்ட, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மக்களிடம் தமிழைக் கொண்டு சென்று கோடிக்கணக்கான மக்களை வாசிக்க, எழுதவைத்தார். உள்ளுர் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து தந்தியில் வெளியிட்டார்.  உலகப்போரில் தினத்தந்திக்குக் காகிதப் பஞ்சம் ஏற்பட்டபோது வைக்கோலை அரைத்துத் தாள் தந்து கைத்தாள் தந்தி தந்தார்.  தொழில் துறையில் பின்தங்கிய தென் மாவட்டத்தின் சேரன்மகாதேவியில் 1962ல் சன் காகித ஆலையை உருவாக்கினார்.  இந்தியாவிலேயே தமிழ்ப் பத்திரிக்கைகள்தான் அதிகம் விற்பனையாகின்றன.  இதற்குக் காரணம் பேச்சு வழக்கிலுள்ள மொழியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று மேனாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தந்தியைப் புகழ்ந்து பேசியுள்ளார்.  ஆண்டியார் பாடுகிறார்.  சாணக்கியன் சொல் ஆகிய பகுதிகள் பாமர மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
தொகுப்புரை
    சமூக மாற்றம் என்பது இரவில் சிந்தித்துக் காலையில் அரங்கேறுவது அன்று.  அது நீண்ட தொடர் முயற்சி; அதில் தொடர்ந்து தமிழ் இதழ்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
    நேதாஜியின் பீராங்கிகளுக்கு அஞ்சியதை விடப் பாரதியின் இந்தியா காகிதங்களுக்கு ஆங்கிலேயர் அஞ்சினர்.  ஆயுதங்களால் முடியாததைத் தமிழ்க் காகிதங்கள் சாதித்துள்ளன.
    தமிழரை வாசிக்க வைத்துப் புதிய மரபுகளை நோக்கிக் கொண்டு சென்ற புதுமைப்பித்தன், கு.பா.ரா. ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, வண்ணதாசன் போன்றோரின் எழுத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டுச் சமூகம் மாற்றம் காணத் தமிழ் இதழ்கள் உறுதியாய் உதவுகின்றன.
    மொழிப்போர் நடந்தபோது திருவனந்தபுரத்திலும் “தினமலர்“ கொண்டு வந்து டி.வி.ராம சுப்பையரும் குறிப்பிடத்தக்கவர்தாம் குமுதம் இதழைப் பல லட்சக்கணக்கில் வாசகரிடம் கொண்டு சென்ற எஸ்.ஏ.பி.யும் பாராட்டுக்குரியவர்.
    புதிய நோக்கோடு செயல்பட்டு புதுப்புனல், ரசனை, அம்ருதா, புன்னகை காலச்சுவடு, உயிர்மை, பறை தீராநதி, கணையாழி, இந்தியாடுடே, கசடதபற போன்ற சிற்றிதழ்களின் பங்களிப்பையும் மறுக்க இயலாது.
6.    குரோட்டன்ஸ் செடிகளைத் தொட்டியில் நட்டு அழகு பார்ப்பதை விட, அதே மண்ணில் பூசணி விதை போட்டு நாம் உருவாக்கித் பூசணிக்காய் இச்சமுதாயத்தில் ஒருவனது பசி அகற்றும்.  அறியாமைப் பசியகற்றும் அரும் பணியைத்தான் இச்சமூகம் இன்று பத்திரிகையாளர்களிடம் எதிர்பார்க்கிறது.
தந்தை பெரியாரின் குடிஅரசு இதழின் 80 ஆண்டுகள் நிறைவின் நினைவாக தமிழ்த்தினை நடத்திய இதழ்கள் எனும் கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை. (மார்ச். 2007, திருச்சிராப்பள்ளி) இதழியல் ஆய்வுக்கோவை (பக்.223 – 227)
                                  வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.


முன்னுரை
    தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை.  கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி.  1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.
வண்ணதாசனும் இயற்கையும்
    சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.  தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார்.  ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.
    “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
    செய்தி யாழினி பகுதியொடு
    அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1
தலைவன் தலைவி ஆகியோரின் மனவுணர்வினைக் கருப்பொருட்கள் மீது ஏற்றி, அவற்றின் பின்னணியில் பாத்திரங்களின் ஆழ்மனப்பதிவைச் சங்க இலக்கியங்கள் அழகாக விளக்கின.  இறையனாரின் குறுந்தொகைக் கவிதை
   
“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது, கண்டது மொழிமோ.
    பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்
    செறி எயிற்று, அரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ, நீ அறியும் பூவே“2
“மயில் போன்ற அழகான பற்களுடைய அப்பெண்ணின் கூந்தலை விட அதிக வாசனையுள்ள பூ உள்ளதா? என்ற தலைவனின் கேள்வி, அழகிய இறக்கை உடைய வண்டினை நோக்கியே அமைகிறது.  வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு மானுட வளர்ச்சிச் சிந்தனையோடு அமைகின்றன.  நான் இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டதெல்லாம் அதன் பிரமாண்டமும் மௌனமும் மட்டுமே3 என்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் கருத்து வண்ணதாசனுக்குப் பொருந்துகிறது.  கவிஞர் அறிவுமதியின் “கடைசி மழைத்துளி“ கவிதைத் தொகுதிக்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரை சுற்றுச்சூழல் சார்ந்த அவரது கருத்தியலை முன்வைக்கிறது.  படைப்பாளியுடன் ஆய்வாளர்.  நிகழ்த்திய நேர் காணலில் “ரொம்பச் சமீபகாலக் கடிதங்களில்“ நான் என்னை ஒரு தாவரமாக உணர்கிறேன் என்றே பதிவு செய்துள்ளேன்“4 என்று வண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
    கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப்பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, பெய்தலும் ஓய்தலும் ஒளியிலே தெரிவது ஆகிய பத்து சிறுகதைத் தொகுதிகளிலும் வண்ணதாசனின் இயற்கை சார்ந்த பதிவுகளாகவே அமைகின்றன.  வற்றாத ஜீவ நதி தாமிரபரணி, வெட்டப்படும் மரங்கள் அதிகாலைகளை அழகாக்கும் பூக்கள், வானில் சுதந்திரமாய் பறக்கும் பறவைகள், அடிக்கடிக் கனவில் வரும் யானைகள் இவைகளே வண்ணதாசன் சிறுகதைகளை அழகு செய்வன.
    “வெளியேற்றம்“ சிறுகதையில் வீட்டுவேலை செய்ய வந்த சிறுமி யாரோ அங்கிருந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு வருந்துகிறாள்.  அவளது துடிப்பை வண்ணதாசன், “இது வெட்டப்பட்டு முறிய முறிய அவளுக்குள் இருந்து பறவைகளின் சப்தம் “சலார்“ என்று ஒரே சமயத்தில் வேட்டுக்கு அதிர்ந்து இறக்கையடித்துப் புறப்பட்டு, ஆனால் முடியாமல் முட்டுவது போலத் தோன்றியது5 என்கிறார்.
    வண்ணார்பேட்டையில் தாமிரபரணியின் வட்டப் பாறையை, முங்கிப் படுத்திருக்கும் யானையின் முதுகோடு ஆசிரியர் ஒப்புமைப்படுத்துகிறார்.
    “யானை முங்கிப்படுத்திருப்பது மாதிரி வட்டப்பாறை இருந்தது6 தாத்தாவின் முகத்தை விளக்க
    “பசலிக்கொடி மாதிரி குளிர்ச்சியாக இருந்தது தாத்தா முகம்“7 என்றும் “டம்ளருக்குள் ஒரு புழுவைப்போலச் சேமியா கிடந்தது“8  சத்தமில்லாமல் ஓடுகிற நதியின் கரையில் நிற்கிற மாதிரி இரைச்சல் ஏதுமற்ற அலுவலகத்தில் நின்றான்9 என்று பல உவமைகளைக் கையாண்டுள்ளார்.   
    வண்ணதாசன் சிறுகதைகளைச் செறிவாக்கப் பயன்படுத்தும் உவமைகளில் இயற்கை சார்ந்த உவமைகள் (34 சதவீதம்) முதலிடம் பிடிப்பதாக இவ்வாய்வாளர் தம் முனைவர்; தம் முனைவர் பட்ட ஆய்வேட்டில் நிறுவியுள்ளார்.
    “சூரியன் அருகில் பறக்கிறவர்கள்“ கதையில் சூரியனுக்கு அருகே பறக்க ஆசைப்பட்டு எரிந்து போகிற “இக்காரஸ்“ எனும் கிரேக்கத் தொன்மத்தைப் படைத்துள்ளார்.
    தாமிரபரணி, வண்ணதாசன் சிறுகதைகளின் மையப் புள்ளியாகத் திகழ்கிறது.  “பெய்தலும் ஓய்தலும்“ கதைத் தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையில் “நதியும் மணலற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.  இதுவரை அது தன் நீர்மையை மணலால் உச்சரித்துக் கொண்டு வந்தது. அள்ளப்பட்ட மணல், கலக்கிற சாயக் கழிவுகளில் மீன்கள் மூச்சுத் திணறுகின்றன.  நீந்துகிற மீன்களையல்ல, அதிகாலையில் இறந்து ஒதுங்கியிருக்கிற மீன்களைப் பற்றியே இந்தத் தினத்துக் கவிதை இருக்க முடியும்.“10  மண்ணள்ளும் அசுர எந்திரங்களால் மொட்டையடிக்கப்படும் தாமிரபரணியின் தற்கால நிலையைப் படைப்பாளி வேதனையோடு பதிவு செய்துள்ளார்.
    புறவுலகின் அதிர்வுகள் அவரது அக உலகை உலுக்கும்போது அதைப் படைப்பாக மாற்றுகிறார்.  1984 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின், நாட்டில் நடைபெற்ற இனக்கலவரத்தில் இறந்துபோனோரின் சடலங்களை ஒப்புமைப்படுத்துகிறார்.  “பெயர் தெரியாமல் ஒரு பறவை“ கதையில், பெயர் தெரியாமல் இறந்து கிடக்கும் பறவையை வண்ணதாசன் இவ்வாறு வர்ணிக்கிறார்.
    நாட்டில் நடைபெற்ற துயரமான சம்பவத்தைப் பறவையோடு இணைத்து வண்ணதாசன் சிறுகதையாகப் படைத்தார். “குழந்தைகளை மனிதர்களையெல்லாம் அடித்து இரவோடிரவாக இப்படி வாசல்களில் நிர்த்தாட்சண்யமின்றி எறிந்து போகிற சமீபத்திய இனக்கலவரங்கள் ஞாபகம் வந்தது.  வயலில் அகோரமாய்ச் செத்துக் கிடக்கிற கிழவி, வரிசையாக வயிறூதிக் கிடத்தப்பட்டிருக்கிற சிசுக்களின் வரிசையை அதிகப்படுத்தி ஒருத்தன் கைகளில் ஏந்திவருகிற இன்னொரு மல்லாந்த குழந்தையின் ஊதின வயிற்றுத் தொப்புழ், இறந்து கிடக்கிற தன் குழந்தையின் உடலைக்கண்டு, அதனருகே உட்கார்ந்து அழுகிற தகப்பனின் கிழிந்த முகம், அப்படிக் கிழிந்த நிலையில் ஒரு கைத்துப்போன சிரிப்புப் போலப் புகைப்படத்தில் பதிவாயிருப்பது எல்லாம் கலந்து அந்த ஒற்றைப் பறவையாகக் குப்புறக் கிடந்தது11  
கல்யாண்ஜி கவிதைகளில் “இயற்கை“ சித்திரிப்பு
    திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி மாணவராகப் பயின்றபோது சீட்டுக்கவிகள் எழுதிய டி.எஸ். கல்யாண சுந்தரம் என்கிற வண்ணதாசன், கவிதைகளை கல்யாண்ஜி எனும் புனைப்பெயரில் எழுதியுள்ளார்.  மொழியின் சுருக்கெழுத்தாகக் கல்யாண்ஜி கவிதைகள் படைக்கிறார்.
    “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
    வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க
    நவகவிதை“12
என்று கவிதைக்குப் பாரதி வகுத்த இலக்கணம் கல்யாண்ஜி கவிதைகளுக்குப் பொருந்துகிறது.
    கல்யாண்ஜியின் கவிதைகள் ஆழமான சிந்தனைத்தளத்தில் சொற்சித்திரங்களாகக் கட்டமைப்பட்டுள்ளன.  அழகியல் தன்மை மிகுந்தனவாக, இயற்கையைக் கொண்டாடும் தன்மையுடையனவாக அமைகின்றன.  தாமிரபரணி மண்ணை விட்டுப் பிரிந்த பிரிவின் வருத்தமும், இயற்கை மீதான தாக்குதல் குறித்த வருத்தமும் அவரது கவிதைகளில் பதிவாகியுள்ளன.
    செப்பறைத் தேரிலும்
    படியும்
    சிமெண்ட் ஆலைப்புழுதி“13
என்று எழுதும் கல்யாண்ஜி, சிமெண்ட் ஆலையால் திருநெல்வேலி படும் பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.  இயற்கையின் மீது கல்யாண்ஜி தொடக்ககாலம் முதலே பாசம் கொண்டிருந்தார்.  அது காலப்போக்கில் வளர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அக்கறையாக மாறியது.  வண்ணதாசன் 1966ஆம் ஆண்டு வ.உ.சி. கல்லூரியின் வணிகவியல் மாணவராகப் பயின்றபோது எழுதிய “அந்தி மனம்“ எனும் இயற்கை சார்ந்த கவிதையை ஆய்வாளர் தன் ஆய்வேட்டில் பதிவு செய்துள்ளார்.
    “அழகுக் கவிதை செய அட்சரங்கள் கோர்த்தது போல்
    அந்திக் கரைவானில் அஞ்சனத்தைக் குழம்பாக்கி
    அள்ளிப் பரப்பி அங்கிங்கே விட்டெறிந்து
    புள்ளி சேர்த்துப் புனைகின்ற கோலமென
    வெள்ளிப் பிழம்பாய் வீசுகதிர் பாய்ந்துவரக்
    கொள்ளி நுனியாகக் குருதிச் சிவப்பாக
    பள்ளிச் சிறுபையன் பட்ட பிரம்படியால்
    உள்ளங்கைச் செம்மை உருவேற்கும் ஒன்றாக
    வானம் இருந்ததுகான்! வார்ப்பழகு கொண்டதுகான்!
    மோனத்துள் நான், அழகில் மூழ்கியது பித்து மனம்!“14
அறுபதுகள் முதலே கல்யாண்ஜி அழகியல் கவிஞராக இயற்கைக் கவிஞராகத் திகழ்ந்ததை அறிய முடிகிறது.  புலரி, கல்யாண்ஜி கவிதைகள், முன்பின், அந்நியமற்ற நதி, நிலா பார்த்தல், உறக்கமற்ற மழைத்துளி, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள், இன்னொரு கேலிச் சித்திரம் ஆகிய கல்யாண்ஜியின் எட்டுத் தொகுதிகளிலும் இயற்கை சார்ந்த அவரது மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைக் காணமுடிகிறது.

“நேரடி வானத்தில்
    தெரிவதை விடவும்   
    நிலா அழகாக இருப்பது
    கிளைகளின் இடையில்“15
என்று நிலாவைக் கவிஞர் வர்ணிக்கிறார்
    மார்கழி மாத அதிகாலையில் போனால்
    பீர்க்கம் பூக்களையும் நட்சத்திரங்களையும்
    நாமே எட்டிப் பறித்துக் கொள்ளலாம்.“16

கல்ணாஜி கவிதைகளில் இடம்பெறும் பூக்கள் நிறத்தாலும் மணத்தாலும் தோற்றத்தாலும் உள்ளார்ந்த ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.  தமிழர் பண்பாட்டில் அகவாழ்விலும் புறவாழ்விலும் பூக்களே நிறைந்திருக்கின்றன.  போர்ச் செய்திகளை அறிவிக்கும் ஊடகமாக வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, ஊழிஞை, நொச்சி போன்ற மலர்களைச் சங்க இலக்கியம் சொல்கிறது.  அகப்பாடல்களிலும் பூக்கள் உள்ளுறையும் செய்திகளோடு அழகியல் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.  கல்யாண்ஜி கவிதைகள் குறித்து வல்லிக்கண்ணன் கருத்து தெரிவிக்கும்போது,  தொடர்பே இல்லாத பல விஷயங்களைத் தொகுத்து வாழ்க்கையின் யதார்த்தத்தை சித்திரிக்கிற முயற்சிகளாக அவை உள்ளன.  மனசின் அலை பாய்தல்களாக அழகுடன் சிதறிக் சிரிக்கும் சொற்சித்திரங்களாகப் பல கவிதைகள் விளங்குகின்றன. சொற்சித்திரங்களாக சிறுகவிதைகள் மிளிர்கின்றன.  அவை எல்லாமே அழகை நேசிக்கிற, அன்பை ஆராதிக்கிற, மனிதத்தை மதிக்கிற மென்மையான உள்ளத்தின் இனிய உணர்வு வெளிப்பாடுகளாகும்.“17
முடிவுரை
    இலக்கியம் வாழ்க்கையின் கண்ணாடியாக அமைகிறது.  ஓர் உயர்ந்த இலக்கை நோக்கி மனிதனை அழைத்துச் செல்கிறது.  மானுட வளர்ச்சிக்கான மதிப்பீடுகளைக் காலந்தோறும் வழங்கிக் கொண்டே இருக்கிறது.  “நான் எல்லோரையும் ஏற்றுக்கொள்கிறேன்.  அவரவரின் பலங்களோடும் பலவீனங்களோடும்“ என்று கூறும் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் அன்பிலக்கியங்களாக அமைகின்றன  இயற்கையைப் போற்றுதலே மானுட வளர்ச்சியின் முதல்படி என்ற கருத்தியலை வலியுறுத்துகின்றன.  யாவற்றையும் இரசிக்கக் கற்றுத் தருகின்றன.  கல்யாண்ஜியின் கவிதைகளில் வண்ணதாசனின் கதைகூறும் தன்மையும், வண்ணதாசன் சிறுகதைகளில் கல்யாண்ஜியின் கவிதைத் தன்மையையும் நம்மால் உணர முடிகிறது.

மரங்களை அவர் நேசித்தார்,

“பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொரமொரவென
மரங்கள் எங்கோ சரிய“18
“கூடுமானவரை இயற்கை மனிதர்களைப் பத்திரமான இடத்தில்தான் வைக்கிறது.  நாம் எவ்வளவுதான் அவற்றைப் பத்திரக் குறைவான இடத்துக்குக் கொண்டு போனாலும்“19 என்கிறார் வண்ணதாசன் இயற்கையைப் பாதுகாக்கத் துடிக்கும் உயர்ந்த சிந்தனையே வண்ணதாசனின் மானுட வளர்ச்சிச் சிந்தனை.
குறிப்புகள்
1.    தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள். 20.
2.    குறுந்தொகை, பா.2.
3.    எஸ். ராமகிருஷ்ணன், கதாவிலாசம், ப.105.
4.    ச. மகாதேவன், வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பி.இ.ப.19.
5.    வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.344.
6.    மேலது. ப.953.
7.    மேலது. ப.918.
8.    மேலது. ப.250.
9.    மேலது. ப.181.
10.    வண்ணதாசன், பெய்தலும் ஓய்தலும், ப.7.
11.    வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.358.
12.    பாரதியார், பாரதியார் கவிதைகள், ப.28.
13.    அறிவுமதி, கடைசி மழைத்துளி, ப.12.
14.    ச. மகாதேவன் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு. ப.179.
15.    கல்யாண்ஜி, இன்னொரு கேலிச் சித்திரம், ப.59.
16.    மேலது, ப.71.
17.    கல்யாண்ஜி, உறக்க மற்ற மழைத்துளி, பக.5-6.
18.    கல்யாண்ஜி, தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், ப.64.
19.    வண்ணதாசன், அகம் புறம், ப.86.

திருநெல்வேலி சாரள்தக்கர் மகளிர் கல்லூரித்தமிழ்த் துறை நடத்திய “மானுட வளர்ச்சியில் நவீன இலக்கியங்கள்“ எனும் கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை