Sunday 7 August 2011

                     சி. பா. ஆதித்தனாரின் இதழியல் சாதனைகள்
பேராசிரியர் முனைவர் . மகாதேவன், எம்.., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

மொழி உணர்வு அற்றுப் போய்விட்ட காலச் சூழ்நிலையில் அவ்வுணர்வினை ஊட்டும் எழுச்சிமனிதர்களின் தேவை கட்டாயமாகிவிட்டது.  சுதந்திர உணர்வு குன்றிய காலத்தில் பாரதியின் எழுதுகோல் எரிமலையாக எழுச்சியை ஏற்படுத்தியது.  நாளிதழ்கள் யாவும் ஆங்கிலத்தில் அல்லது வடமொழி கலந்து எழுதி வந்த காலகட்டத்தில் தந்தியின் தந்தையாக, தமிழர் தந்தையாகத் தோன்றி இதழியல் துறையில் சாதனை படைத்த மாமனிதர் பெருமதிப்பிற்குரிய ஐயா திரு.சிவந்தி பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் அவர்கள். சி.பா. ஆதித்தனார் 1905 ஆம் ஆண்டு அப்போதைய நெல்லை மாவட்டத்தின் காயாமொழி எனும் ஊரில் பிறந்தார்.  தமிழரின் சிறப்பை உலகறியச் செய்ய நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கினார்.  தமிழுக்காகப் பலமுறை சிறை சென்ற தூய தமிழ்த் தொண்டராகவும் அவர் திகழ்கிறார்.  உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என வாழ்ந்தார்.  தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் தலைமையேற்றுத் தொண்டு புரிந்தபோது திருக்குறளை இவர் அரியணையில் அமரவைத்தார்.
இதழாளர் சி.பா. ஆதித்தனார்
    தமிழைப் பாமர மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாகச் செய்தித்தாளைக் கருதினார் சி.பா. ஆதித்தனார்.  ஆதித்தனாரின் இதழியல் பணி செய்திக் கடிதங்களிலிருந்து தொடங்கியது.  இலண்டனில் இருந்தவாறே டைம்ஸ் ஆப் இந்தியா, ஆஜ் போன்ற இதழ்களுக்குச் செய்திக் கடிதங்கள் வரைந்தார்.  அம்மாநகரிலிருந்து வெளிவரும் ஸ்பெக்லேட்டர் இதழில் ஆதித்தனார் எழுதினார்.  உலக ஏடுகளை எல்லாம் உற்று நோக்கிய ஆதித்தனார் தமக்கென்று தமிழில் தனித்துவம் மிக்க நாளிதழ் தொடங்கப் பேராவல் கொண்டார்.  சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தமிழ்முரசு நாளிதழ் போலத் தமிழ்நாட்டில் மதுரையை மையமாகக் கொண்டுமதுரை முரசு எனும் இதழைத் தொடங்கி நடத்த, அதை ஆங்கிலேய அரசு தடை செய்ததால் தமிழன் எனும் நாளிதழைத் தொடங்கினார்.  முனைவர் என். ரெங்கநாதன் குறிப்பிடுவதைப்போல1942 இல் ஆகஸ்ட் 23 ஆம் நாளன்று தமிழன் முதல் இதழ் வெளிவந்தது.  பக்கத்திற்குப் பக்கம் படங்கள் அன்றைய கல்கி (10.09.1942) இரு வண்ணங்களில் அச்சிடப்படும் இதழ் தமிழ்நாட்டில் தமிழன் இதழ்தான் என்று பாராட்டியது.  அச்சமயத்தில்தான் தினத்தந்தி நாளிதழும் வெளியிடப்பட்டது.  தந்தி 15.10.1942 இல் பதிவு செய்யப்பட்டு 01.11.1942 இல வெளியாகிறது.  தினத்தந்தி இவ்வாறு உருப்பெறுகிறது.

சி.பா ஆதித்தனாரின் இதழியல் உத்திகள்
    தமிழரால் தமிழருக்காக நடத்தப்படும் இதழே தமிழன் எனத் தமிழ்ப்பற்றுக் கொள்கையோடு இதழைத் தொடங்கிய சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்கு இதழ்களை வெளியிட்டார்.
    வாசகனுக்குத் தேவையான செய்திகளை, பாமர மொழியில் கொச்சைச் சொற்களை நீக்கிப் புரியும்படி எழுதினார்.  எழுத்துக்கூட்டித் தேநீர் கடையில் படிப்பவன் கூடத் தினத்தந்தி வாசனானான். (.கா.) மாவட்ட ஆட்சித்தலைவரைக் கலெக்டர் என்றே தினத்தந்தி வெளியிடுகிறது.
    செய்திகளை முந்தித் தருவது தந்தி எனும் நிலையைச் சி.பா. ஆதித்தனார் உருவாக்கி உயிர்த்துடிப்புள்ள நாளிதழ் தினத்தந்தி என விளம்பரப்படுத்தினார்.
    யாரையும் குறை கூறாத தன்மையோடு தந்தியைத் தந்ததால், அரசியல் மாற்றங்கள் தினத்தந்தியின் விற்பனையைப் பாதித்ததில்லை.
    இறக்குமதி செய்யப்பட்ட அதி நவீன அச்சு இயந்திரத்தை ஆதித்தனார் பயன்படுத்தியதால், அதிரடியாக வரும் அதிகாலைச் செய்திகளைக் கூட உடனடியாக அச்சிட்டு, காலை 6 மணிக்குத் தந்துவிட முடிந்தது.
    செய்தித்தாள் தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர் சேரன்மகாதேவியில் உடை மரங்களிலிருந்து காகிதம் தயாரிக்கும் சன் காகித ஆலையை உருவாக்கினார்.  இதனால் பல பக்கங்களை வாசகர்களுக்குக் குறைந்த விலையில் தர முடிந்தது.
    பரபரப்பான செய்திகளை எட்டுப் பத்தியில் பருத்த எழுத்துக்களில் தலைப்பிட்டு வாசகரைக் கவர்ந்தார்.
    கருத்துப்படம் கேலிப்படங்களைத் தினத்தந்தியில் வெளியிட்டுப் பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
    காது விளம்பரங்கள், வரி விளம்பரங்கள், வேலைவாய்ப்பு விளம்பரங்கள் என விளம்பர வருவாயைப் பெருக்கி இதழை வளர்த்தார்.
    திரைக் கலைஞர்களை முன்னிலைப்படுத்தி நேர்முகம், கட்டுரைகள், திரை விமர்சனங்கள் வெளியிட்டதால் திரை விளம்பரங்களும் தந்தியை எட்ட உதவி செய்தார்.
    தினத்தந்தியின் ஆசிரியர் குழுவுக்கு வழிகாட்டும் வகையில் இதழாளர் கையேட்டினை வெளியிட்டார்.  இந்திய இதழியல் வரலாற்றில் இப்படிப்பட்ட அனுபவ, யதார்த்தமாக அமைந்த நூல் இதுவரை வந்ததில்லை என அறிவுலகம் பாராட்டும்படி அமைந்தது.  இன்றும் மக்கள் தகவல் தொடர்பியல் பயிலும் மாணவர்களுக்கு அந்நூல் வழிகாட்டியாக அமைகிறது.
    எல்லாப் பதிப்புகளையும் (14) அச்சிட்டு அனுப்பும் இடம் இரயில், பேருந்து நிலையத்திற்கு அருகில் அமையுமாறு செய்தவர் ஆதித்தனார்.  இதனால் ஓரிரு மணிக்குள் தந்தி பட்டி தொட்டிகளில் எல்லாம் கிடைக்க வழி செய்தார்.
    ஆதித்தனார் பரபரப்பான பெரிய எழுத்துக்களால் சுவரொட்டிகளைத் தயாரிக்கச் செய்து எல்லாக் கடைகளிலும் பளிச்சென்று தெரியுமாறு தொங்கவிடச் செய்தார்.  இதனால் அவ்வப்போது வாங்கிப் படிக்கும் வாசகர்களை ஈர்த்து நிரந்தர வாசகர்களாக மாற்றிக் கட்டிப்போட்டார்.
    வாசகருக்குப் புரியாத வெளிநாட்டுச் செய்திகளைத் தருவதை விட, அடுத்த தெருவில், அடுத்த ஊரில் நடக்கும் உள்ளுர்ச் செய்திகளைப் படத்துடன் ஆதித்தனார் வெளியிட்டதால் தந்தி பல இலட்சங்களை எட்டியது.
    சினிமாப் பாடல்களுடன் கூடிய ஆண்டியார் பாடுகிறார்.  தத்துவம் மூலம் நாசூக்காக விளக்கும் சாணக்கியன் சொல் இவை எல்லாம் ஆதித்தனாரின் மனத்தில் உதித்த உத்திகள்.
    மக்களின் சோதிட நம்பிக்கையை மனத்தில் கொண்டு ஆதித்தனார் சோதிடம், நாள், வார, மாத, வருடப் பலன்களை வெளியிட்டார்.
    காகிதவிலை உயர்வால் ஏனைய நாளிதழ்கள் விலையை ஏற்ற, சொந்தக் காகித ஆலையை ஏற்படுத்திய சி.பா. ஆதித்தனார் குறைந்த விலையில் தந்தியைத் தந்தார்.
ஆதித்தனார் சகாப்தம்
    பாரிஸ்டர் பட்டம் பெற்ற இலண்டனில் உயர் படிப்பு முடித்து வந்த மாகத்மா காந்தி, இந்திய சுதந்திரத்திற்காகத் தன் உடல், பொருள், ஆவி ஆகியவற்றைத் தந்து வென்று காட்டியதற்காக அவரைத் தேசப்பிதா எனப் பாரதம் பெருமையோடு அழைக்கிறது.  அதேபோல பாரிஸ்டர் பட்டம் பெற்று இலண்டன் வரை சென்று சாதித்த மாமனிதர் ஆதித்தனார், வழக்கறிஞராக நிலை பெற்றிருந்தால் பல கோடிகள் சம்பாதித்திருக்க முடியும்.  அதை எல்லாம் விட்டு, தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ் இதழியலுக்காக, அரும்பாடுபட்டதால் தமிழர் தந்தை எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டியது.
    நான் தமிழ்ப் படிக்கக் கற்றுக் கொண்டதே தினத்தந்தியைப் பார்த்துத்தான் என முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண்சிங் குறிப்பிட்டார் என்றால் அதற்கு வித்திட்ட ஆதித்தனாருக்கு என்ன வார்த்தைகளால் நன்றி சொல்ல?  ஆங்கிலம் மட்டுமே உயர்ந்த மொழி, தமிழ் பேசுவது கேவலமானது, குறைவானது என இருந்தநிலையில் இதழை ஓர் இயக்கமாக மாற்றி இலட்சக்கணக்கான வாசகரை எட்டியவர் சி.பா. ஆதித்தனார்.
    அறிவித்தல், அறிவுறுத்துதல், வணிகம் செய்தல், மகிழ்வித்தல், எண்ணத்தை உருவாக்குதல் எனும் இதழியல் நோக்கங்களோடு, செயல்படத் தூண்டுதல் எனும் புதிய போக்கும் சி.பா. ஆதித்தனாரால் உருவானது.  சதக் சதக்என்று குத்தினான் என உணரச்சியோடு சம்பவத்தை வாசகர் மனத்திரையில் படமாக ஓட்டிக் காட்டிய சி.பா. ஆதித்தனாரின் உத்தியை இன்று பல இதழ்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டதை அறியமுடிகிறது.
    தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து இன்றைய சூழலில், சுவையாகச் சூடாகச் செய்தித் தாட்கள் வெளிவராவிட்டால் அழிவை நோக்கிச் செல்ல நேரிடலாம்.  முந்தைய நிமிட சம்பவத்தை அடுத்த நிமிடத்தில் தொலைக்காட்சிச் செய்திகள் படத்தோடு வெளியிடும் நிலையில் செய்தித்தாள் வெறும் செய்திகளை மட்டும் வெளியிட்டு வென்றுவிட முடியாது.  நாளிதழைச் சுவாரசியமாக்க, வாசகனைக் கவர்ந்திழுக்க சி.பா. ஆதித்தனாரின் இதழியல் உத்திகளைப் பயன்படுத்தியே தீர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.  நர்சரிப் பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினாலே 10 ரூபாய் தண்டத் தொகை கட்ட வேண்டிய வருந்தத்தக்க நிலையில் தமிழ்நாடு இருக்கும் நிலையில் ஆதிததனாரின் நாம் தமிழர் இயக்கத்தின் தேவையும் அவருடைய தமிழ்ப்பற்றுடைய பார்வையும் இந்த நூற்றாண்டுக்கென மறுபதிப்புச் செய்ய வேண்டியுள்ளது.  அவ்வகையில் காலத்தைக் கடந்து நிற்கும் ஐயா சி.பா.ஆதித்தனார் பாரதியைப் போலத் தீர்க்கத்தரிசியே என்பதில் ஐயமில்லை.  நூற்றாண்டு கடந்து இன்றும் சகாப்தமாகத் திகழும் சி.பா.ஆதித்தனாரின் இதழியல் சாதனைகளை இன்னொருவர் செய்வது சாத்தியமில்லை.
பயன்பட்ட நூல்கள்
1.    சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு விழா மலர். ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்.
2.    குப்புசாமி குரும்பூர், அமைச்சர் ஆதித்தனார், ராணி பதிப்பகம்,
சென்னை – 7, 1978.
3.    சாமி. .மா. (1990) இதழாளர் ஆதித்தனார், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
4.    கலைவாணி. சோ. (1982) இதழியல் உத்திகள், ஸ்ரீ பராசக்தி வெளியீடு குற்றாலம்.
(இக்கட்டுரை ஆசிரியர் பாரதப் பிரதமரின் சத்பவனா தேசியவிருநது (1994) பெற்றவர்)
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நூற்றாண்டு விழாவை ஒட்டி, திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்கக் கல்லூரி நடத்தியஆதித்தனாரின் தமிழ் இதழியல் தொண்டுஎனும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.