Sunday 23 October 2011

காலத்தை வென்ற ஞாலக்கவிஞன் பாரதி
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி)
திருநெல்வேலி.
கைப்பேசி  : 09952140275
Email : nellaimaha74@gmail.com

மாநிலம் பயனுற வாழ்வதற்கான வல்லமையைப் பாரதி, பராசக்தியிடம் வரமாகக் கேட்கிறான்.
    பாரதிதாசனாரும் ஆத்திசூடியில் நல்ல சிந்தனைகளை விதைக்கச் சொல்கிறார்.  வெறும் பேச்சு பேசேல் என்று கூறும் பாவேந்தர்.
    “தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறுகதைகள் பேசி
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்வாடப்
    பல செயல்கள் செய்து
    நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
    கொருங் கூற்றுக்கு இரையெனப்பின் மாயும்
     வேடிக்கை மனிதரைப் போல
    வீழ்வேனெ நினைத்தாயோ”
என்ற பாரதியின் வரிகளை அடியொற்றியே ஆத்திசூடி படைத்துள்ளார்.
“வையம் வாழ வாழ்” என்ற பாவேந்தரின் வரி, பொதுமைச் சமுதாயத்திற்கு மக்களை அழைத்துச் செல்கிறது.  “கெடு நினைவு அகற்று, சோர்வு நீக்கு” எனும் ஆத்திசூடிப் பாடல் வரிகளில் “நல்ல எண்ணம் வேண்டும்” என்ற உயரிய நீதி நிலை பெறும். சிந்துக்குத் தந்தை, செம்மொழித் தமிழின் கம்பீரக்கவிக்குழந்தை எட்டயபுரத்து மண் ஈன்ற பண் சுமந்த பைந்தமிழ் தேர்ப்பாகன், தமிழில் புதிய மரபுகளின் தொடக்கமாக அமைகிறார்.  நூறாண்டுகள் வாழ வரங்கேட்ட மகாகவிபாரதி இம்மண்ணில் வாழ்ந்தது முப்பதொன்பது ஆண்டுகளே!
    புதுக்கவிதையின் பிதா மகனாக, தேர்ந்த மொழி பெயர்ப்பாளராக, சீரிய அரசியல் பார்வை கொண்ட பத்திரிக்கையாளராக, சமுதாய மாற்றம் கண்ட சீர்திருத்த செம்மலாக பாரதி எடுத்த ஆவதாரங்கள் ஆயிரம்... ஆயிரம்...
    1898ஆம் ஆண்டு பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் இறப்பைத் தழுவ, பாரதி காசிக்குச் சென்றார்.  அலகாபாத் சர்வகலா சாலையில் பிரவேசத் தேர்வில் தேர்ச்சிபெற்ற, காசி இந்து கலாசாலையில் சமஸ்கிருதம் இந்தி மொழிகள் பயின்றார்.  1898 முதல் 1902 வரை அவர் வாழ்ந்த காசி வாழ்க்கை அவரைச் சீர்திருத்தவாதியாக மாற்றியது.  “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்று சினப்பட்ட பாரதி, தன் சுய சரிதையில் இப்படி எழுதுகிறார்.
    “தாழுமுள்ளத்தர், சோர்வினர், ஆடுபோல் தாவித்தாவிப் பல பொருள் நாடுவோர், விழுமோரிடையூற்றினுக்குக் கஞ்சுவோர், விரும்பும்யாவும் பெறாரிவர் தாமன்றே, விதியை நோவர் தம் நண்பரைத் தூற்றுவர், விதியை நோவர் தம் நண்பரைத் தூற்றுவர், வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர், சதிகள் செய்வர், பொய்ச் சாத்திரம் பேசுவர், சாதகங்கள் புரட்டுவர் என்று பட்டியல் இடுகிறார்.”  இந்திய புராணக் கதைகளில் மரணத்தின் அதிபதியாக இருக்கும் “எமனை” பாரதி காலருகில் அழைத்தார்.
    “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன, காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” என்று கம்பிரமாகப் பாடிய பாரதி உணவைத் தேடியுண்டு, உணவு செரிக்கப்பழங்கதைகள் பேசி, பிறர் வாழ்வில் சிக்கல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தும் வேடிக்கை மனிதர்களைப் போல வாழ விரும்பவில்லை.
    “தேடிச்சோறு நிதந்தின்று – பல
    சின்னஞ்சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பல செயல்கள் செய்து
    நரைகூடிக் கிழப்பருவமெய்தி
    கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
    பல வேடிக்கை மனிதரைப் போலே
    நான் வீழ்வேனென்று நினைத்தாயோ”
என்ற பாரதியின் வரிகள் தன்னம்பிக்கையின், தனித்துவத்தின் வசந்த வரிகளாகத் திகழ்கின்றன.   காளி தேவியிடம் வரம் கேட்டும் பாரதி,
   
காளி நீ காத்தருள் செய்யே,
    மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்
    மாரவெம் பேயினை அஞ்சேன்”
என்று கம்பீரமாகப் பேசிய பாரதி, புதிய ஆத்திசூடியில் ரௌத்திரம் பழகச் சொல்கிறார்.
    கல்வியெனும் கலங்கரை விளக்கால் மட்டுமே கடலில் தவிக்கும் வாழ்க்கைப் படகுக்கு வெளிச்சம் தர முடியும் என்று பாரதி கருதினார்.
    “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்
    இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்
    பயிற்றுப் பலகல்விதந்து இந்தப்
    பாரை உயர்த்திட வேண்டும்”
என்று கவிபாடினார்.
    தமிழப்புதுக் கவிதையின் முதல் வசன கவிதை எனச் சிறப்பு பெறும்
“காட்சி” கவிதையில் பாரதி யாவற்றையும் ரசிக்கச் சொல்கிறான்.
    இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான்
    இனிமையுடைத்து, காற்றும் இனிது,
    தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது,
    ஞாயிறு நன்று, திங்களும் நன்று,
    வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
    மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது
    கடல் இனிது, மலை இனிது, காடு நன்று
ஆறுகள் இனியன... உயிர் நன்று
சாதல் இனிது”
என்று கூறிய மாகவி  பாரதி  “பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்”
என்று கூறினார்.  உண்மைதான், வரகவிகளுக்கு மரணமில்லை.

No comments:

Post a Comment